சில சிந்தனைகள்…
April 23, 2009 at 2:45 பிற்பகல் மறுமொழியவும்
சில நாட்களுக்கு முன் நண்பன் ஒருவனிடமிடுந்து வந்த மின்னஞ்சலில் சில கூற்றுகள் கூறப் பட்டிருந்தன. இவை அனைத்தையும் என்னால் ஏற்க முடியாவிட்டாலும் பலவற்றை ஏற்றுக்கொள்ளத்தான் தோன்றியது.
உதாரணமாக 14ஆவது கூற்றை என்னால் ஒத்துக்கொள்ள இயலாது. பல நேரங்களில் ஞாயமான விசயங்களுக்காக கோபம் தோன்றும்..ஆனால் அக்கோபத்தில் மனிதன் செய்யும் செயல்கள் தாம் அநியாயமாக மாறிவிடும். இன்று உலகத்தில் பல நாடுகளில் நடக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் போர்களே இதற்கு சாட்சி.
அதே போல் 31ஆவது கூற்றையும் என்னால் ஏற்க இயலாது. ஒரு வேளை இப்படியும் இருக்கலாம். அக்கருத்தை எழுதியவர் எதை மனத்தில் கொண்டு அதை எழுதினார் என்பது எனக்கு விளங்க வில்லை, ஆதலால் ஏற்க இயலவில்லை!
இதோ அக்கூற்றுகள்:
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய் இரு.
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை .
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.
16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்.
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்.
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.
22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்.
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.
Entry filed under: பைந்தமிழ் மடல்கள்..., மின்னஞ்சல் இணைப்புகள்.. Tags: .
Trackback this post | Subscribe to the comments via RSS Feed